General29 August 2026

எல் நினோ தாக்கத்தால் விவசாயத்துக்கு பாதிப்பு – குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படுமா?

இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மற்றும் சூறாவளி காரணமாக பலத்த மழை பெய்து, வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக முன்னாள் சிரேஷ்ட புவியியல் துறை பேராசிரியர் கலாநிதி எஸ். அண்டனி நோர்பர்ட் தெரிவித்துள்ளார்.

‘சூரியனின் விழுதுகள்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அறுவடைக்குத் தயாராகும் பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், பெரும்போக விவசாய நடவடிக்கைகளை முன்கூட்டியே ஆரம்பிக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறுபோகப் பயிர்கள் வெற்றிகரமாக அறுவடை செய்யப்பட்டுள்ள நிலையில், பெரும்போகப் பயிர்களை வெள்ளப்பாதிப்பிலிருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பருவமழைக் காலம் நிறைவடைந்த பின்னர் எல் நினோ தாக்கம் காரணமாக எதிர்வரும் டிசம்பர் முதல் மார்ச் வரையான காலப்பகுதியில் வடகிழக்குப் பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து கடும் வறட்சி ஏற்படக்கூடும் எனவும் பேராசிரியர் எச்சரித்துள்ளார்.

இதனால் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம் காணப்பட்டாலும், அதனை எதிர்கொள்வதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes