General05 September 2026

எல் நினோ வறண்ட வானிலை: 1.15 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு - குடிநீர் விநியோகம் தீவிரம்

எல் நினோ (El Niño) தாக்கம் காரணமாக வறண்ட வானிலயால் இலங்கையின் 7 மாவட்டங்களில் உள்ள 35 பிரதேச செயலகப் பிரிவுகளில் மொத்தம் 115,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று (5) வெளியிடப்பட்ட அறிக்கைகளின்படி, 34 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 34,608 குடும்பங்களைச் சேர்ந்த 113,354 நபர்களுக்கு தற்போது குடிநீர் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, வறண்ட வானிலையால் மொனராகலை மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 8 பிரதேச செயலகப் பிரிவுகளில் 12,732 குடும்பங்களைச் சேர்ந்த 41,360 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தவிர, மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 பிரதேச செயலகப் பிரிவுகளில் 33,394 பேருக்கும், பதுளை மாவட்டத்தில் 10 பிரதேச செயலகப் பிரிவுகளில் 20,418 பேருக்கும், அம்பாறை மாவட்டத்தில் 3 பிரதேச செயலகப் பிரிவுகளில் 11,995 பேருக்கும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

மேலும், பொலன்னறுவை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 6,842 பேரில் 5,562 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 1,374 பேரில் 474 பேருக்கும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

அனுராதபுரம் மாவட்டத்தில் ஒரு பிரதேச செயலகப் பிரிவில் 30 குடும்பங்களைச் சேர்ந்த 151 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தடையின்றி குடிநீர் வழங்குவதையும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பதையும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes