General06 September 2026

புதிய முகம்... புதிய கொள்கை...- 21ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ப உருமாறும் ஐக்கிய தேசியக் கட்சி!

நாட்டின் ஜனநாயக அமைப்பும் மக்களின் இறையாண்மையும் தற்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் படி இறையாண்மை மக்களுக்கே உரியது என்றும், அதனை அரசாங்கம் சரியாக அங்கீகரிக்கத் தவறியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

முன்மொழியப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சர்வாதிகாரப் போக்குடன் செயற்படாமல், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவே தாம் நீதிமன்றத்தை நாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல்வாதிகள் முறையான காரணங்களின்றி கைது செய்யப்படுவதாகவும், எதிர்க்கட்சிகள், சுயாதீன தொழிற்சங்கங்கள் மற்றும் சட்டத்தரணிகள் சங்கம் போன்ற அமைப்புகள் முடக்கப்படுவதாகவும் அவர் சாடியுள்ளார்.

"தற்போதைய சூழலில் நாடாளுமன்றத்திலிருந்தா? அல்லது பெலவத்தையிலிருந்தா? நாடு ஆளப்படுகிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை 1946 ஆம் ஆண்டு டி.எஸ். சேனாநாயக உள்ளிட்ட தலைவர்கள் இணைந்து சுதந்திர இலங்கையை உருவாக்கியது போல், தற்போதும் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க அனைத்துப் பிரிவினரும் ஒன்றிணைய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டமைக்குத் தாம் கடும் எதிர்ப்பைத் தெரிவிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes