General08 September 2026

உயர் நீதிமன்றின் வியாக்கியானத்தை சபாநாயகர் இந்த வாரம் அறிவிப்பார் என எதிர்பார்ப்பு!

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை நிறைவு செய்துள்ள உயர்நீதிமன்றம், அது குறித்த தமது வியாக்கியானத்தை சபாநாயகருக்கு அனுப்பவுள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையில், அந்தத் தீர்மானம் இன்று ஆரம்பமாகும் நாடாளுமன்ற அமர்வு வாரத்தில் சபாநாயகரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை குறித்த மனுக்கள் மீதான விசாரணைகள் கடந்த 3ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், உயர்நீதிமன்றம் தனது இரகசிய முடிவை சபாநாயகருக்கு அனுப்பி வைப்பதாக அறிவித்திருந்தது.

இதன்படி, அந்தத் தீர்ப்பு கிடைத்தவுடன் சபாநாயகர் அதனை நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார்.

நாடாளுமன்ற அமர்வுகளை இன்று முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்த உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் கிடைத்தவுடன், அதனைப் நாடாளுமன்றத்தில் விரைவாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னதாக தெரிவித்தார்.

பேருவளையில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes