International07 May 2026

சிறுமியின் மரணத்தில் மர்மம் - ஆய்வக சோதனையில் வெளியான அதிர்ச்சித் தகவல்

கேரள மாநிலத்தில் 6 வயது சிறுமி ஒருவர் ரேபிஸ் (விசர் நாய் கடி) தொற்றால் உயிரிழந்துள்ளார்.

ஸ்ரீகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி, கடந்த மாதம் 27ஆம் திகதி வீதி வழியே சென்றுகொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சிறுமிக்கு காய்ச்சலோ அல்லது வேறு பெரிய உடல்நலப் பாதிப்புகளோ முன்னதாக இருந்திருக்கவில்லை. இருப்பினும், சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

சிறுமியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கருதப்பட்டதால், இது 'இயற்கைக்கு மாறான மரணம்' என வகைப்படுத்தப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சிறுமியின் மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய, அவரது உமிழ்நீர் மற்றும் கண் கசிவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, திருவனந்தபுரத்தில் உள்ள மாநில பொது சுகாதார மற்றும் மருத்துவ ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன.

இந்நிலையில் நேற்று (6) வெளியான பரிசோதனை முடிவுகளில், சிறுமிக்கு ரேபிஸ் (Rabies) தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது.

மருத்துவ விசாரணையில், சில நாட்களுக்கு முன்பு சிறுமி தற்செயலாக அருகில் இருந்த குப்பைக்குழி ஒன்றில் விழுந்துள்ளார்.

அப்போது அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அந்தக் குப்பைக்குழியில் இருந்த ரேபிஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாயின் எச்சில் மூலம் அல்லது நகக்கீறல் மூலம் சிறுமிக்குத் தொற்று பரவியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

காயம் ஏற்பட்ட தருணத்தில் சிறுமிக்கு நாய் கடித்ததற்கான அறிகுறிகள் தென்படாததால், ஆரம்பத்தில் இதற்குப் பெரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.

தற்போது ரேபிஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் சிறிய காயங்கள் குறித்தும் விழிப்புடன் இருக்குமாறு சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes