General12 May 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, இன்று கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் இன்று(12) முன்னிலையாகவுள்ளார் என அவரது ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி முன்னாள் ஜனாதிபதி இன்று முற்பகல் 9.00 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியான, அண்மையில் சந்தேகத்துக்கிடமான முறையில் மரணமான கபில சந்திரசேன வழங்கியதாக கூறப்படும் வாக்குமூலம் ஒன்றின் அடிப்படையிலேயே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

கபில சந்திரசேன உயிருடன் இருந்தபோது, தனது வாக்குமூலம் அச்சுறுத்தல் மற்றும் வற்புறுத்தலின் பேரிலேயே பெறப்பட்டது என நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசி தாக்கல் செய்திருந்ததாக சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில், சட்டவிரோத வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டால், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

"முன்னாள் ஜனாதிபதி கேள்விகளுக்குப் பயந்து ஓடுபவர் அல்ல" என்று குறிப்பிட்டுள்ள அவரது பேச்சாளர், சட்ட ரீதியான விடயங்களை ஆராய்ந்த பின்னர் அவர் இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாவார் என்று உறுதிபடக் கூறியுள்ளார்.

இந்த அழைப்பாணை தொடர்பாக சட்டத்தரணிகள் குழு கூடி விரிவாக ஆராய்ந்துள்ளதுடன், விசாரணையின் சட்டத்தன்மை குறித்து கேள்வி எழுப்பவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes