General08 August 2026

இன்று பல பகுதிகளுக்கு மழை: பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (08) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சபரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், வடமேல் மாகாணத்தில் அவ்வப்போது சில இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமத்திய, சபரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes