General30 August 2026

விசாரணைக்கு விரைவில் முன்னிலையாவார் ரவி கருணாநாயக்க - சட்டத்தரணிகள் உறுதி!

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எதிர்வரும் தினமொன்றில் கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று (29) முற்பகல் நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்திற்கு சென்ற சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவரது சட்டத்தரணிகள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.

தேசிய லொத்தர் சபைக்கு ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்தமை தொடர்பான விசாரணையொன்றுக்கு அமைவாக, ரவி கருணாநாயக்கவை கையூட்டல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், நேற்று முற்பகல் அதிகாரிகள் குழுவொன்று பத்தரமுல்லை, ரஜமல்வத்த வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு சென்றுள்ளது.

எனினும், அந்தச் சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க வீட்டில் இருக்காததால், ஆணைக்குழுவின் அதிகாரிகள் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் ரவி கருணாநாயக்கவின் தரப்பினர் ஊடகங்களுக்கு விளக்கமொன்றையும் வழங்கியுள்ளனர்.

குறித்த தினத்தில் நாடாளுமன்ற உறுப்பினரால் ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாத நிலையில், அவரது சட்டத்தரணிகள் ஊடாக வேறு ஒரு தினத்தை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும், அதற்கு ஆணைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவரது தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தப் பின்னணியிலேயே கையூட்டல் ஒழிப்பு விசாணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு வந்ததாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எதிர்வரும் தினமொன்றில் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாகவும் அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes