General01 May 2026

கதிரியக்கப் பொருள் தட்டுப்பாடு - புற்றுநோய் நோயாளிகளின் PET ஸ்கேன் சேவை பாதிப்பு

கொழும்பு தேசிய மருத்துவமனை மற்றும் மஹரகம அபேக்‌ஷா மருத்துவமனைகளில் PET ஸ்கேன் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமையால், புற்றுநோய் நோயாளிகள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

PET ஸ்கேன் செய்வதற்கு அவசியமான கதிரியக்கப் பொருளுக்கு (Radioactive tracer) ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாகவே இந்தச் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்யும் விநியோகஸ்தர்களை பதிவு செய்வதில் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு மேற்கொண்ட தாமதம் காரணமாகவே இந்தத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக, கடந்த மார்ச் 27 முதல் தேவையான பொருள் நாட்டில் கிடைக்கவில்லை.

புற்றுநோய் செல்களை துல்லியமாகக் கண்டறிதல், அவற்றின் செயற்பாட்டை மதிப்பிடுதல், நோய் பரவியுள்ள எல்லையைத் தீர்மானித்தல் மற்றும் சிகிச்சையின் செயற்திறனை மதிப்பீடு செய்தல் ஆகியவற்றில் PET ஸ்கேன் முக்கிய பங்கு வகிக்கிறது.

இது குறித்து தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தலைவர் மருத்துவர் ஆனந்த விஜயவிக்கிரம தெரிவிக்கையில்,
கடந்த ஆண்டு முறையான பதிவு இல்லாமலேயே இந்த பொருளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

இருப்பினும், இந்த ஆண்டு முதல் அனைத்து விநியோகஸ்தர்களையும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு பதிவு செய்வதை கட்டாயமாக்கியுள்ளது.

பதிவு செய்வதற்குத் தேவையான தகவல்களைச் சமர்ப்பிக்குமாறு நிறுவனங்கள் கோரப்பட்ட போதிலும், அந்த விவரங்களை வழங்குவதில் ஏற்பட்ட தாமதமே தற்போதைய நிலைக்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், தற்போது விநியோகஸ்தர்கள் பதிவு செய்யப்பட்டு, உரிய இரசாயனத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவர் விஜயவிக்கிரம தெரிவித்தார்.

அதன்படி, தேவையான பொருள் விரைவில் நாட்டிற்குள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
Related recommendation
Hiru TV News | Programmes