General04 July 2026

புதிய வரி மாற்றங்கள் மக்களுக்கு கூடுதல் சுமையா? நிபுணர் எச்சரிக்கை

இலங்கையில் வரி வசூலை முறைப்படுத்துவதற்காக கொண்டுவரப்படும் புதிய வரி நிர்வாக மாற்றங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கைகள், போதிய விழிப்புணர்வு இல்லாத சூழலில் பொதுமக்களுக்குப் பெரும் பொருளாதார மற்றும் மன ரீதியான சுமையாக மாற்றமடைந்துள்ளதாக வரி மற்றும் முகாமைத்துவ ஆலோசகர் AGS. சுவாமி நாதன் சர்மா தெரிவித்துள்ளார்.

சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) முறைமை கட்டாயமாக்கப்பட்டு தொலைபேசி எண்களுடன் இணைக்கப்படுவதுடன், KYC நடைமுறைகளும் உள்ளீர்க்கப்படுவதால் தனிநபர்களின் நிதி நடவடிக்கைகள் அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்புக்குள் வருகின்றன. இது பொதுமக்களிடையே "டிஜிட்டல் அழுத்தத்தை" தோற்றுவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், கூகுள், பேஸ்புக், யூடியூப் போன்ற டிஜிட்டல் தளங்களுக்கான வரி விதிப்பால் பயனர்களின் செலவுகள் அதிகரிக்கவுள்ளன.

அத்துடன், வங்கி மற்றும் நிதிச் சேவைகள் மீது 20.5% வரி விதிக்கப்படுவதால் பரிவர்த்தனைகள் செலவுமிக்கதாக மாறுவதுடன், VAT மற்றும் மூலதன ஆதாய வரி போன்றன நடுத்தர வர்க்கத்தினரையும் முதியவர்களையும் நேரடியாகப் பாதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

புதிய டிஜிட்டல் வரி முறைகளைக் கையாள்வதில் வங்கித் துறையினரின் போதிய பயிற்சியின்மை காரணமாக பொதுமக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த வரி மாற்றங்கள் காரணமாக மின்சாரம் மற்றும் தண்ணீர்க் கட்டணங்கள் போன்ற அத்தியாவசியச் சேவைகளின் விலைகளும் உயர்வடையும் சாத்தியங்கள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Related recommendation
Hiru TV News | Programmes