General04 July 2026

டெங்கு பரவலைக் கட்டுபடுத்த 6 முன்மொழிவுகள் முன்வைப்பு

நாட்டில் டெங்கு பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 6 முக்கிய முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனை முன்வைத்துள்ளார்.

அதற்கமைய, பூச்சியியல் அதிகாரிகளுக்குத் தேவையான போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்றும், களப்பணிகளை திறம்பட முன்னெடுக்க அவர்களுக்கு தேவையான சட்ட அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

2007 ஆம் ஆண்டின் நுளம்பினால் பரவும் நோய்த்தடுப்புச் சட்டத்தை தற்போதைய சூழலுக்கு ஏற்ற வகையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

அதேநேரம், டெங்கு ஒழிப்புப் பணிகளில் அரசியல் தலையீடுகள் இன்றி, அறிவியல் அடிப்படையில் சுயாதீனமாக செயற்பட அதிகாரிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

அநுராதபுரம், குருநாகல், மாத்தளை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதால், சமய விழாக்களை முன்னிட்டு விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.

டெங்கு ஒழிப்பிற்குத் தேவையான சர்வதேச தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளைப் பெற எதிர்க்கட்சி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட டெங்கு கட்டுப்பாட்டு முறையை இலங்கையிலும் அறிமுகப்படுத்துமாறும் அவர் அரசாங்கத்தைக் கேட்டுள்ளார்.

பூச்சியியல் துறையில் நிலவும் பணியாளர் வெற்றிடங்களை விரைவாக நிரப்புவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes