Sports04 July 2026

வைபவ் சூர்யவன்ஷிக்கு இங்கிலாந்து நட்சத்திர வீரர் பாராட்டுடன் எச்சரிக்கை!

ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடி, 230 க்கும் அதிகமான துடுப்பாட்ட சராசரியுடன் 776 ஓட்டங்களைக் குவித்து நடப்புத் தொடரின் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரராக 15 வயதான இளம் துடுப்பாட்ட வீரர் வைபவ் சூர்யவன்ஷி உருவெடுத்தவர்.

இதன் காரணமாக இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இருபதுக்கு 20 தொடரில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவரது சர்வதேச அறிமுகப் போட்டிக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டிக்கு முன்னதாக ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் சாம் கரன், வைபவ் சூரியவன்ஷி குறித்துப் பாராட்டியதுடன் சில எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளார்.

"15 வயதில் இந்திய அணிக்காக விளையாடுவது என்பது ஒரு நம்ப முடியாத அற்புதமான கதை. நான் ஒரு மாத காலமாக ஐபிஎல் போட்டிகளைப் பார்த்தேன். அவர் மிக இலகுவாக விளையாடுகிறார். எதிரணியாக இருந்தாலும் அவரது திறமையை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும். 15 வயதில் நான் சர்ரே (Surrey) உள்விளையாட்டு அரங்கில் பந்துகளை எதிர்கொள்ளப் பழகிக் கொண்டிருந்தேன்.

எவ்வாறாயினும், இங்கிலாந்தில் விளையாடுவது என்பது அவருக்கு முற்றிலும் மாறுபட்ட சவாலாக இருக்கும். இங்கேயுள்ள ஆடுகளங்கள் இந்திய ஆடுகளங்களை விட மிகவும் மெதுவானவை. அவருக்கு எதிராக எங்களிடம் சில வியூகங்கள் உள்ளன.

அதேபோல், இந்தியாவில் ஒரு கிரிக்கெட் வீரராக இருப்பது என்பது மிகப்பெரிய விடயம். அவருக்குக் கிடைக்கும் இந்த அதீத புகழை அவர் எவ்வாறு கையாள்கிறார் என்பதுதான் அவரது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

ஏனைய வீரர்களைப் போலவே அவரது வாழ்க்கையிலும் ஏற்றத்தாழ்வுகள் வரலாம், எனவே அவர் பணிவுடன் தனது திறமையை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும்" என சாம் கரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்திய குழாமில் இடம்பெற்றுள்ள வைபவ் சூரியவன்ஷி, இன்று இடம்பெறவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது இருபதுக்கு 20 போட்டியில் அறிமுக வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes