General04 July 2026

நாட்டில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு

இலங்கையில் டெங்கு காய்ச்சலின் பரவல், நடப்பு ஆண்டில் பாரிய அளவில் அதிகரித்து வருவதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் இற்றைப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய, நாடு முழுவதும் 58,810 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், 39 மரணங்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய தற்போது மரண வீதம் 0.07 சதவீதமாக காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டில் கடந்த ஜூன் மாதத்தில் மாத்திரம், மிக அதிகமாக 21,547 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

மே மாதத்தில் 8,590 பேரும், ஜனவரியில் 7,866 பேரும் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஜூலை மாதத்தின் முதல் மூன்று நாட்களிலேயே 3,422 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

மாகாண ரீதியில், மேல் மாகாணம் 30,876 நோயாளர்களுடன் பதிவாகியுள்ளனர்.

அடுத்தபடியாக தென் மாகாணத்தில் 9,316 நோயாளர்களும், சபரகமுவ மாகாணத்தில் 5,129 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

மாவட்ட ரீதியில், கொழும்பு மாவட்டத்தில் 12,017 பேரும், கம்பஹாவில் 11,740 பேரும், மாத்தறையில் 4,262 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனிடையே, நாடு முழுவதும் 142 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் டெங்கு பரவும் அதிவேக அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

எனவே, டெங்கு பரவல் தீவிரமடைந்து வருவதால், பொதுமக்கள் தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes