General06 July 2026

பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு - சம்பவத்துக்கு பொறுப்பேற்றார் நீதி அமைச்சர்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுக்கு விடயதான அமைச்சர் என்ற ரீதியில் தாம் முழுமையான பொறுப்பை ஏற்பதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

அதற்கமைய, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் அனுதாபங்களையும் தாம் தெரிவிப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.

எதிர்பாராதவிதமாக இடம்பெற்ற இந்த சம்பவம் மிகுந்த கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஏன்?, யாரால், என்ன நோக்கத்திற்காக இந்த மோதல் நிலை உருவாக்கப்பட்டது என்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, இந்த மோதல் நிலையை வழிநடத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில், நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்த கைதிகளை ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான மற்றும் விரிவான அறிக்கையை நாளைய தினத்துக்குள் வெளியிட எதிர்பார்ப்பதாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்றைய தினம் இடம்பெற்ற பாரிய மோதல் சம்பவத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் 7 பேரும் சிறைக்கைதிகள் 19 பேருமாக மொத்தமாக 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், இந்த சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

அவர்களில் 18 பேர் கம்பஹா, வெலிசர ராகம ஆகிய மருத்துவமனைகளுக்கும் 4 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கும் மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சிறைச்சாலையில் நேற்றைய தினமும் சில கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற சம்பவத்தின் போதும், இரு கைதிகள் உயிரிழந்ததுடன், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes