General07 July 2026

இலங்கையை மிரட்ட வருகிறதா எல் நினோ? அதிகாரிகள் எச்சரிக்கை

வலுவடைந்து வரும் 'எல் நினோ'காலநிலை உலகளாவிய நிகழ்வு காரணமாக, இலங்கையில் அடுத்த சில மாதங்களில் மழையற்ற வறண்ட காலநிலையும், வெப்பநிலையின் அதிகரிப்பும் காணப்படலாம் என அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்வது குறித்து சுற்றாடல் அமைச்சர் தம்மிக படபெந்தி குறிப்பிடுகையில், உணவுப் பாதுகாப்பு, நீர் மேலாண்மை மற்றும் எரிசக்திப் பாதுகாப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டங்களை நடைமுறைப்படுத்த கடந்த ஜூன் 22ஆம் திகதி நியமிக்கப்பட்ட விசேட குழு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

இலங்கையில் தற்போது தென்மேற்கு பருவமழை நிலவி வரும் போதிலும், எல் நினோ தாக்கத்தால் ஜூலை மற்றும் ஒகஸ்ட் மாதங்களில் மழையளவு கணிசமாகக் குறையும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.

எனினும், வலுவான எல் நினோ ஆண்டுகளான 1982, 1997 மற்றும் 2015ஆம் ஆண்டுகளைப் போலவே, இந்த முறையும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வழமையை விடக் கூடுதல் மழைவீழ்ச்சி பதிவாக வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, நாட்டின் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தற்போது 50 முதல் 65 சதவீதம் வரை திருப்திகரமாக உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் வரவிருக்கும் பெரும்போக பயிர்செய்கைக்குத் தேவையான நீர் விநியோகம் மற்றும் குடிநீர் விநியோகத்தில் தற்போதைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும், எனினும் மின்சார உற்பத்திக்காக நீர்த்தேக்க நீரைப் பயன்படுத்துவதைக் குறைக்குமாறு இலங்கை மின்சார சபையிடம் கோரப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes