General06 July 2026

"பழிவாங்கல் என்பது ஒருபோதும் சிறந்த ஆட்சியாகாது" – முன்னாள் அமைச்சர் அலி சப்ரி சாடல்

அரசாங்கம் தனது அரசியல் எதிரிகளையும், தமக்கு முன்னர் பதவியிலிருந்தவர்களையும் கைது செய்வதிலும், பழிவாங்குவதிலும் மட்டுமே தனது முழு நேரத்தையும், அதிகாரத்தையும் செலவிடுவதால் நாட்டின் உண்மையான நிர்வாகச் செயற்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கொடூர மோதலைத் தொடர்ந்து, "பழிவாங்கல் ஆட்சியாகும் போது" (WHEN VENGEANCE BECOMES GOVERNANCE) என்ற தலைப்பில் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டில் தற்போது தீவிரமடைந்து வரும் டெங்கு நோய் பரவல், சிறைச்சாலைகளின் கடுமையான நெருக்கடி, விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கான நியாயமான விலை மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வு போன்ற மக்களின் அத்தியாவசியப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அரசாங்கத்திடம் எந்தவொரு முறையான கொள்கையோ அல்லது திட்டங்களோ இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒருவரைக் கைது செய்வதோ அல்லது சிறையிலடைப்பதோ ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறலாமே தவிர, அது அரசாங்கத்தின் சாதனையாகாது என அலி சப்ரி,தெரிவித்துள்ளார்.

கைவிலங்கு என்பது சுகாதாரக் கொள்கையோ, விளக்கமறியல் உத்தரவு என்பது விவசாயக் கொள்கையோ அல்லது சிறைச்சாலை என்பது நல்லாட்சிக்கான சான்றோ அல்ல என்றும், பழிவாங்கலால் டெங்குவை ஒழிக்கவோ, பொருளாதாரத்தை வளர்க்கவோ முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகளும் கைதுகளும் அரசியல் பசிக்கு ஏற்ப அமையாமல், நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் சட்டம் தன் கடமையைச் சுயாதீனமாகச் செய்ய அனுமதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அரசியல் அதிகாரம் என்பது தற்காலிகமானது என்பதை தற்போதைய ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ள அவர், இன்று மற்றவர்களை ஒடுக்குவதற்காகப் பயன்படுத்தும் அதே அதிகார இயந்திரம், நாளை மற்றொருவர் கைக்கு மாறும் போது தமக்கெதிராகவும் திரும்பலாம் என்பதை உணர்ந்து, பழிவாங்கலை விடுத்து நல்லாட்சியை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes