General15 September 2023

செனல் 4 ஆவணப்படம் குறித்து விசாரிக்கும் குழு விபரங்கள் வெளியாகின!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் 'செனல் 4' தொலைக்காட்சியில் வெளிப்படுத்தப்பட்ட ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழு தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் 'செனல் 4' தொலைக்காட்சியில் ஆவணப் படமொன்று வெளியிடப்பட்டது.

அதில் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்காக குறித்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவலாளரான ஹன்சீர் அஷாத் மௌலானா தெரிவித்திருந்தார்.

இதற்காக தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சாலேவுக்கும் தாக்குதல்தாரிகளுக்கும் இடையே தாம் சந்திப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதேநேரம், இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரக்காந்தன் தமக்கு தாக்குதல்தாரிகளை அறிமுகப்படுத்தியதாகவும் தகவலாளரான ஹன்சீர் அஷாத் மௌலானா தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு, தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சாலே மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளனர்.

இந்தநிலையில், குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளுக்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ.இமாம் தலைமையில் குழுவொன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் ஏ.சி.எம்.ஜயலத் வீரக்கொடி மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ ஏ.ஜே.சூசா ஆகியோர் இந்த குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes