Entertainment12 July 2026

ஏதிலிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் - ஹிப்ஹொப் ஆதியின் உருக்கமான வேண்டுகோள்

படித்த ஏதிலிகளில் இருந்து வெறும் 1 சதவீத பேருக்கு மட்டுமே தங்களின் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைப்பதாக ஹிப்ஹொப் ஆதி தெரிவித்துள்ளார்.

உலக ஏதிலிகள் தினத்தை முன்னிட்டு, ஐக்கிய நாடுகளின் ஏதிலிகள் முகமை மற்றும் தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை சபை இணைந்து சென்னையில் நடத்திய நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப்ஹொப் தமிழா ஆதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய ஹிப்ஹொப் ஆதி, ஏதிலிகள் எதிர்கொள்ளும் சமூகப் புறக்கணிப்புகள் மற்றும் வேலைவாய்ப்புச் சிக்கல்கள் குறித்துத் தனது ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டார்.

ஏதிலிகள் மறுவாழ்வு முகாம்களில் இருந்து ஆண்டுதோறும் 2,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உயர்கல்வி முடித்து வெளிவருகின்றனர். இருப்பினும், அவர்களில் வெறும் 1 சதவீதத்தினருக்கு மட்டுமே தகுதிக்கேற்ற வேலை கிடைப்பதாக ஆதி தெரிவித்தார்.

இடப்பெயர்வு மற்றும் 'முகாம் வாசிகள்' என்ற சமூக முத்திரை காரணமாக, இளைஞர்கள் தங்களின் உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்த அஞ்சும் சூழல் நிலவுவதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் மட்டும் 29 மாவட்டங்களில் 103 ஏதிலிகள் முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழ் ஏதிலிகள் வசித்து வருகின்றனர் என உத்தியோகபூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஏதிலிகள் மீதான சமூகப் பார்வையை மாற்றி, அவர்களது கல்வித் தகுதிக்கேற்ப தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை வழங்க முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
Related recommendation
Hiru TV News | Programmes