General12 July 2026

இராகலை சம்பவம் - களத்திற்கு விரைந்தார் பிரதி அமைச்சர்

இராகலை, சென்லேனாட்ஸ் தோட்டத்தில் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு நிரந்தரத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

கடந்த 10ஆம் திகதி நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் குறித்த தோட்டத்தைச் சேர்ந்த 6 குடும்பங்கள் அவர்களின் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று (12) சம்பவ இடத்திற்கு நேரில் சென்றிருந்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், இந்த வெளியேற்றமானது கடந்த காலங்களில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பின் அடிப்படையிலேயே இடம்பெற்றுள்ளதாகவும், இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வந்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என முன்வைக்கப்படும் விமர்சனங்கள் முற்றிலும் தவறானவை எனவும் தெளிவுபடுத்தினார்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பில் எல்.ஆர்.சி (LRC) நிறுவனத்துடன் கலந்துரையாடி உண்மையான பின்னணி குறித்து ஆராயவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது தற்காலிகத் தீர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் லால் காந்தவுடன் கலந்துரையாடி சரியான தீர்வை பெற்றுக்கொடுப்பதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கான குடியிருப்புகளை வழங்குவதற்கு நிச்சயமாக எமது அரசாங்கம் முன்னின்று செயற்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes